×

ஒன்றிய அமைச்சராக தொடர்கிறேன்.. பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் : அந்தர் பல்டி அடித்த சுரேஷ் கோபி!!

திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி நேற்று ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்று கொண்டார். திருச்சூரில் வெற்றி பெற்றால் சுரேஷ் கோபிக்கு கேபினட் அந்தஸ்துடன் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி உறுதி என்று கருதப்பட்டது. முக்கிய துறைகளுடன் கூடிய கேபினட் அந்தஸ்துடன் அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கருதி வந்த நிலையில் தற்போது இணை அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது சுரேஷ் கோபிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது இது தொடர்பாக அவர் பதவியேற்றபின் டெல்லியில் பேட்டியும் அளித்துள்ளார்.

அதில், “நான் ஏற்கனவே 4 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதற்காக முன் பணத்தையும் வாங்கி விட்டேன். அமைச்சர் பதவியை ஏற்றால் அந்தப் படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தயாரிப்பாளர்களுக்கும், அந்தப் படங்களில் பணிபுரிபவர்களுக்கும் பெரும் சிரமமும், நஷ்டமும் ஏற்படும்.எனவே எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை என்று ஏற்கனவே நான் கட்சி மேலிடத்திடம் கூறியிருந்தேன். எனக்கு சினிமா தான் முக்கியமாகும். ஒன்றிய அமைச்சர் பதவி எனக்கு தேவை இல்லை. நான் எம்பி என்ற நிலையில் திருச்சூர் தொகுதி மக்களுக்காக சிறப்பான முறையில் பணிபுரிவேன். என்னுடைய நிலையை நான் மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். இனி கட்சி தான் இதில் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக ஊடகங்களில் வெளியான தகவல் பெய்யானது என பாஜக எம்.பி. சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றுவது தனக்கு கிடைத்த கவுரவம். பிரதமர் மோடி தலைமையில் கேரள வளர்ச்சிக்கு பாடுபட உறுதியாக உள்ளேன். கேரள மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தொடர்வது பெருமை அளிக்கிறது. மோடி அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக தொடர்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அமைச்சராக தொடர்கிறேன்.. பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் : அந்தர் பல்டி அடித்த சுரேஷ் கோபி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Modi ,Cabinet ,Suresh Kobe ,Andar Baldi ,Thiruvananthapuram ,Rajya Sabha ,Suresh Gobi ,Union Associate Minister ,Suresh Kobi ,Union Minister ,Thrissur ,Union ,
× RELATED மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல்...