×

தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்: வி.கே.பாண்டியன் திடீர் அறிவிப்பு!


பாட்னா: தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். ஒடிசாவில் அண்மையில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பிஜு ஜனதாதளம் தோல்வியை சந்தித்தது. ஒடிசாவில் அரசுப் பணியிலிருந்து விலகி நவீன் பட்நாயக்கிற்காக அரசியலில் சேர்ந்து பணியாற்றினார் பாண்டியன். நவீன் பட்நாயக் ஆட்சியில் வி.கே.பாண்டியன் ஒடிசாவின் சிறப்புத் திட்ட ஆலோசகராக இருந்தார்ர். இதனிடையே வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்று நவீன் பட்நாயக் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்; ஒடிசாவில் கால் வைத்த நாள் முதல் மக்கள் என் மீது பெரும் அன்பு செலுத்தினார்கள். ஒடிசாவின் சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு உள்பட பல துறைகளில் சாதனை படைத்தது நவீன் பட்நாயக் அரசு. இளைஞர்களுக்காகவும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் உழைத்தது எனக்கு பெரும் திருப்தி அளித்தது. ஒடிசாவின் பள்ளிகளை மேம்படுத்துவதில் நான் அரசு பள்ளியில் படித்த அனுபவம் கை கொடுத்தது.

கொரோனா காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கட்டமைப்பு தயாராக இருப்பதை உறுதி செய்தேன். ஒடிசாவை சூப்பர் புயல்கள் தாக்கியபோது மக்கள் உயிரிழப்பை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டேன். நவீன் பட்நாயக்கின் அனுபவம், நேர்மை, மக்கள் மீதான அவரது அன்பு ஆகியவை தனக்கு ஊக்கம் அளித்தது. நவீன் பட்நாயக்கிடம் நான் கற்றுக் கொண்டது எனது வாழ்நாள் முழுமைக்கும் பயன் தரும். ஒடிசா மீது நவீன் பட்நாயக்கிற்கு இருந்த தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த நான் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

எனக்கு எதிரான பரப்புரைகள் பிஜூ ஜனதா தள வெற்றியை பாதித்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன். ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன், அதன்மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன் இவ்வாறு கூறினார்.

The post தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்: வி.கே.பாண்டியன் திடீர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : V. K. Pandian ,PATNA ,V. SAID ,K. Pandian ,Biju ,Odisha ,Pandian ,Naveen Budnayak ,Naveen Patnayak ,
× RELATED இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு மோடி...