×

கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் – வெற்றிக்கு வழிநடத்திய கழகத் தலைவர் அவர்களுக்கும் நன்றி!

ஜனநாயகத்தைக் காக்கும் இந்த மாபெரும் போரில், உணர்வு பூர்வமாக ஒருங்கிணைந்து வாக்களித்து தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளை 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு இக்கூட்டம் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் – “இந்தியா கூட்டணிக்கும்” வழிகாட்டியாகத் திகழ்ந்த நம் உன்னத தலைவர், தமிழ்நாட்டில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களை மட்டுமின்றி, அகில இந்தியத் தலைவர்களையும் அரவணைத்து இந்த மாபெரும் வெற்றியை இன்றைக்கு தமிழ்நாட்டிலும் – இந்திய அளவில் “இந்தியா கூட்டணி” பெற்றிடவும் உதயசூரியனாகத் இந்திய அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வின் சர்வாதிகார – ஜனநாயக விரோத ஆட்சிக்குத் தக்க பாடம் புகட்டிட – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் “நாற்பதுக்கு நாற்பது” என்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியின் மூலம் வழங்கியுள்ள நல்ல பல திட்டங்களுக்காக 221 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அதிக வாக்குளை வழங்கி, மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், மனமுவந்த பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

சிந்தனையும் செயலும் கொள்கையாகவும் வெற்றியாகவும் கொண்டு செயல்படும் கழகத் தலைவரை இக்கூட்டம் வாழ்த்துகிறது. வணங்குகிறது. பா.ஜ.க. அரசின் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் மீறி கன்னியாகுமரியில் துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி காஷ்மீர் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கருத்தியல், அரசியல் சட்டம் ஆகிய அனைத்தின் மீதான தாக்குதலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றால், அதற்கான முழுப் பெருமையும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை நல்கிய நம் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும் என்பதை இந்தக் கூட்டம் உவகையுடன் – உற்சாகத்துடன், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்க உணர்வுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கழகத் தலைவர்கள் அவர்கள் ஏற்படுத்திய ஒற்றுமை, இந்தியா முழுமைக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மூன்றாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவித்துச் செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு மகத்தான வெற்றியைப் பெற்று தந்திருக்கிறது. மக்கள் போற்றும் ஆட்சியால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தவறவிட்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் சேர்த்தே இந்த முறை வெற்றி பெற்று, “நாற்பதுக்கு நாற்பது” முழக்கம் இனி வரும் காலங்களில் நாட்டிற்கே தெளிவான வழிகாட்டியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பெருமிதத்துடன் இக்கூட்டம் பதிவு செய்து, கழகத்தின் நாடி நரம்புகளாகத் திகழும் கழக நிர்வாகிகளுக்கும் – கழக உடன்பிறப்புகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இணைந்து பணியாற்றிய தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியையொட்டி, கோவையில் முப்பெரும் விழா

தமிழினத் தலைவர் – முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஓராண்டு காலமாகச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினோம். அவரது புகழ்பாடும் விழாக்களாக மட்டுமில்லாமல் அவரது சாதனைகளைச் சொல்லும் விழாக்களாக, மக்களுக்குப் பயனுறு விழாக்களாக அதனை நடத்திட வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் வழிகாட்டினார்கள். அத்தகைய வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் மாவட்டக் கழகங்களின் சார்பில், அனைத்து அணிகளின் சார்பில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்று, நூற்றாண்டின் நாயகராம் தலைவர் கலைஞரின் காலடியில் காணிக்கை ஆக்குவோம்” என்று கழகத் தலைவர் அவர்கள் உறுதியேற்றார்கள். அந்த உறுதியைச் செயல்படுத்திக் காட்டி விட்டார்கள்.

அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா; நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா; இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா – ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14-ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைத்திடுக!

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்கிய இந்தியாவில் வெறுப்பு, பிளவு மனப்பான்மைகளை விதைத்து, மதவெறியைத் தூண்டி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம் என்று “ஒரே ஒரே” என்ற ஒற்றை நோக்கோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாடு உள்ளிட்ட – குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய ஏஜென்சிகளை எதிர்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு என்றே களமிறக்கி, அந்த அமைப்புகளின் நடுவுநிலைமையை மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசியல்சட்ட அமைப்புகளை முடக்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இனிமேலும் இதுபோன்ற “ஆபத்தான விளையாட்டுகளை” நடத்தாமல் இருக்கவே மக்கள் வலிமையான எதிர்க்கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றத்தை இந்தத் தேர்தல் வாயிலாக உருவாக்கியிருக்கிறார்கள். தான் நினைத்ததைச் செய்ய முடியாத அரசியல் நெருக்கடிக்குள் பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாகும். இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற – அரசியல்சட்ட விழுமியங்களையும் சிதைக்க நினைத்த பா.ஜ.க., சிக்கலுக்கு ஆளாகி இருப்பதுதான் இந்த தேர்தலின் மாபெரும் வெற்றியாகும்.

தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்றத்தில் தேர்வு செய்து அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய நாட்டு மக்கள். அந்த மக்களின் உணர்வுகளை நிலைநாட்டிடும் வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்பட்டு, நாட்டின் அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பினை திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எடுத்துக் கொள்கிறது என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிரகடனம் செய்கிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த தேசப்பிதா மகாத்மா காந்தி, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அகற்றிய பிரதமர் மோடி அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் இக்கூட்டம், உடனடியாக அந்த தேசத் தலைவர்களின் சிலைகளை இருந்து இடத்திலேயே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக, நிதியுரிமை – மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம்!

பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ஜி.எஸ்.டி இழப்பீடு தராமல், மெட்ரோ ரயில் நிதி ஒதுக்காமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்தது பா.ஜ.க அரசு. ரயில் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள் அனைத்திலுமே தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்தது. அன்னைத் தமிழ் மொழியை புறக்கணித்து, ஒன்றிய – மாநில உறவிற்கு நியமிக்கப்பட்ட ஆளுநர் மூலம் இடைவிடாத இடையூறு செய்து, தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்கள் போல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தியது. அதற்குத்தான் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.விற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் நலனுக்காக – தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக – தமிழ்நாட்டின் நிதியுரிமை மற்றும் மொழியுரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக அயராது குரல் கொடுக்கவும், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் செயல்படவும் இக்கூட்டம் உறுதி பூண்டுள்ளது. இந்தியக் கூட்டாட்சியின் மாண்பைக் காக்கவும், அரசியல் சட்ட விழுமியங்களின்படி நடந்து கொள்ளவும், சமூகநீதி – மதச்சார்பின்மை – மாநில சுயாட்சி – சமதர்ம சமநிலைச் சமூகம் – எல்லோர்க்கும் எல்லாம் என்ற மக்களாட்சிப் பண்புகளைப் பேணவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் முன்னணிப் படையாகத் திகழும் என்று இக்கூட்டம் அறிவிக்கிறது.

நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக!

நீட் தேர்வை, அதனை அமல்படுத்திய காலத்தில் இருந்து தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து வருகிறது. ஏழை – எளிய, நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் சமூக அநீதித் தேர்வாகவே அது அமைந்துள்ளது என்பதையும், இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி வாய்ப்புள்ளவர்களுக்கான தேர்வு முறையாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்து வந்தோம். இப்பயிற்சி முறையும், தேர்வு முறையில் மாணவர்களை மனவியல் வழியாக சிதைப்பதாக அமைந்தும் இருக்கிறது. அனிதா முதல் எத்தனையோ உயிர்களை இழந்து நிற்கிறோம். இது ஒரு பக்கம் என்றால், இத்தேர்வை நடத்தும் முறையும் சர்ச்சைக்குரியதாக மர்மமானதாக அமைந்துள்ளது. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது, போலியான நபர்கள் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்வது, திருத்தும் முறையில் தில்லுமுல்லு எனப் பல்வேறு குற்றமுறைகள் இதில் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு நடைபெறும் போதும், முடிவுகள் வெளியாகும் போதும் இத்தகைய முறைகேடுகள் பொதுவெளியில் பேசப்படுகிறது. சில மாநிலங்களில் சிபிஐ இது தொடர்பான வழக்குகளை விசாரித்து சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்ட செய்தியையும் பார்க்கிறோம். எந்த வகையில் பார்த்தாலும் மோசமான, மோசடியான ஒரு தேர்வாக நீட் தேர்வு அமைந்துள்ளது. இத்தேர்வை முற்றிலுமாக விலக்க வேண்டும், அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை ஒருமனதாக மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் அதனை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காமல் மெத்தனம் காட்டினார் தமிழ்நாடு ஆளுநர்.

The post கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA MUPERUM CEREMONY ,GOWA ,CHENNAI ,Dimuka ,Mbiks ,Stalin ,Chief Minister ,Tamil ,Nadu ,K. ,Anna Enlightenment Artist Stadium ,M. K. ,Dimuka Mupperum Ceremony ,Goa ,Chief Mu. ,
× RELATED 100 சதவீத வெற்றியால் முதல்வர்...