×

எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல தமிழகத்தில் பாஜ தோற்றுக்கொண்டே இருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல. தமிழகத்தில் பாஜ தோற்றுக்கொண்டே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜ கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார்.

தோல்விக்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘பாஜவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்’’ என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்திருந்தார்.  அப்போது, அதிமுக தலைவர்கள் தோல்விக்கு வேறு காரணங்கள் கூறும்போது எஸ்.பி.வேலுமணி இந்த காரணத்தை கூறுகிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே உள்கட்சி பிரச்னை இருப்பதுபோல் தெரிகிறது” என்றார்.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. ஜெயலலிதா உள்ளிட்ட எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களைதான் நாங்கள் விமர்சனம் செய்தோம். எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல.

அது அவரது சொந்த கருத்து. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதிமுக தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026ல் தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்றால் அது அதிமுகதான். அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு, இந்த கட்சி எவ்வளவு என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரியாகதான் செயல்பட்டார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014ல் பாஜ கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவு.

இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?. தமிழகத்தில் பாஜ ஆர்சிபி அணி போன்றது. தோற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்கள் சிஎஸ்கே. 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம். கேரளாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றார்களா, புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு சீன் காட்டுவது தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எஸ்.பி.வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல தமிழகத்தில் பாஜ தோற்றுக்கொண்டே இருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி appeared first on Dinakaran.

Tags : SB ,Velumani ,AIADMK ,BJP ,Tamil Nadu ,Former minister ,Jayakumar ,Chennai ,DMK alliance ,Puducherry ,SP ,Dinakaran ,
× RELATED கூட்டணியில் இருந்து விலகியது...