×

ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், நேபாளம் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களையும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த முறை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜ 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஒன்றியத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜ மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் கடைசி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, 17வது மக்களவையை கலைக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி முர்மு, 17வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். புதிய அரசு பதவியேற்கும் வரை பிரதமராக நீடிக்க மோடியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். எனவே புதிய அரசு அமைக்க கூட்டணிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக, மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மோடியை கூட்டணி தலைவராகவும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் சந்திரபாபு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் 21 தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதம் வழங்கினர். இதையடுத்து வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு வங்கதேசம், இலங்கை, நேபாளம் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ல் மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாஜகவை சேர்ந்த ஒருவரே சபாநாயகராக தேர்வு செய்வதில் பாஜக உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், நேபாளம் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Heads of State ,Bangladesh ,Nepal ,NEW DELHI ,BAJA ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...