×

40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு கரம் குவித்து நன்றி.! இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என்றும், மேலும் வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள் என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு அடிமைச் சேவகம் செய்த அதிமுக தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழ்நாட்டுக்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்புரை வியூகமாக அமைந்தது. கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எத்தனை கோடி மக்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னோம்.

இந்தியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும், ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். திமுகவின் தேர்தல் அறிக்கையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலன் காக்கும் வகையில் இருப்பதை விளக்கினோம். நாம் மக்களை நேரடியாகச் சந்தித்தோம். மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். அவர்களின் கோரிக்கைகளை, கேள்விகளைச் செவிமடுத்தோம். அதைவிட முக்கியமாக, திமுக கூட்டணி மீது தான் தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் களத்தில் கண்டோம். அவர்களின் நம்பிக்கைதான் இன்று முழுமையான வெற்றியாக விளைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குத் துணைநின்ற திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், திமுகவே உயிர்மூச்சு என வாழும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளிலும் திமுகவினர் சுற்றிச் சுழன்று பணியாற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. 40 தொகுதிகளில் ஏறத்தாழ பாதி அளவு தொகுதிகளில் தான் திமுக போட்டியிட்டது. மீதமிருந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்யும் வண்ணம் பகிர்ந்தளிக்கப்பட்டன. திமுக போட்டியிட்ட தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் துணைநின்று பணியாற்றினர். இத்தகைய ஒருங்கிணைப்பு தான் 40 தொகுதிகளிலும் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமான, கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும், இந்தியாவைக் காத்திட இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் முழு மூச்சாய்ச் செயலாற்றிய அரசியல் இயக்கத்தினர், அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றியை உரித்தாக்குகிறேன். திமுக தலைமையிலான அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் பயன்மிகு திட்டங்களுக்கு நற்சான்றளிக்கும் வகையில் 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள்ளித் தந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு கோடானுகோடி நன்றி.

ஒன்றிய ஆளுங்கட்சியின் அதிகார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றைத் தகர்த்தெறிந்து 40க்கு 40 என்ற மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே அணி முழுமையான வெற்றி பெற்றது என்பது ஒரு சில மாநிலங்களில்தான். அதில் இந்தியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்திருப்பது தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும்தான் என்பது உடன்பிறப்புகளின் ஓயாத உழைப்புக்கும், நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குமான சான்று. நூற்றாண்டு நாயகராம் கலைஞருக்கு இந்த வெற்றியைக் காணிக்கையாக்குவோம் என்று இதற்கு முந்தைய ‘உங்களில் ஒருவன்’ கடிதத்தில் எழுதியிருந்தேன். சொன்னதைச் செய்வோம் என்ற கலைஞரின் வாக்குக்கேற்ப அவர் நிரந்தர ஓய்வு கொள்ளும் நினைவிடத்தில் நெஞ்சம் நெகிழக் காணிக்கையாக்கினேன். மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத் தான் இருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்போம் என்ற உறுதியினை அளியுங்கள். தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவதும், மாநிலத்தின் நலனைக் காக்கும் செயல்பாடுகளுமே உண்மையான வெற்றிக் கொண்டாட்டமாகும். நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான 40க்கு 40 என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப் பெரும்பான்மை பெற முடியாத பாஜவின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு 40க்கு 40 என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். வெற்றியை வழங்கிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கரம் குவித்து நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு கரம் குவித்து நன்றி.! இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India Alliance ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40...