×

தமிழர்களை இழிவுபடுத்தி பாஜ வெளியிட்ட விளம்பரம்: ஜெயக்குமார் கடும் கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பாஜகவின் விளம்பர வீடியோவை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது: ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள், அறிந்தவர்கள். ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜ ஏவியது. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும், அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜ வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜசித்தரித்துள்ளது. உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுத்த முதல் இனம் தமிழினம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பாஜவிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜ அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக, எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன்தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான ரத்தமும், உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாகதான் பாஜ பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் (வி.கே. பாண்டியன்) அறத்தின் வழி நின்று வென்று காட்டுவான். .

 

The post தமிழர்களை இழிவுபடுத்தி பாஜ வெளியிட்ட விளம்பரம்: ஜெயக்குமார் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Jayakumar ,CHENNAI ,Former ,AIADMK ,minister ,Tamils ,Odisha ,
× RELATED தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை மக்கள் எந்த...