×

மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சென்னை: 39 மக்களவை தொகுதி மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. 543 தொகுதிகளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக தேர்தல் நடைபெற்றது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் தலா 1000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க உள்ளார்கள். இதன் மூலம் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோரும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் மட்டும் 3,000 பேர்…
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு மையத்திலும் இணை ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் 3 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

காலை 6 மணிக்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு போலீசார் சென்று விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், மையங்கள் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னரே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Lok Sabha ,CHENNAI ,Lok ,Sabha ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியால் கடும்...