×

பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி; 900 போலீசார் ஆயத்தம்

திருப்பூர்: வரும் 4ம் தேதி நடக்கும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிக்காக மாநகர காவல்துறை சார்பில் 900 போலீசார் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 18-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 17 ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளைய தினம் 57 தொகுதிகளுக்கு நடைபெற்று நிறைவடைகிறது. இதன்பிறகு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு கல்லூரி மையத்தில் நடைபெற உள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்பு கடந்த ஒரு மாத காலமாக வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , விவி பேட் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 900 போலீசாரை பணியமர்த்த மாநகர காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காவல் துறையுடன் கலந்தோசித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு வகுப்பறையிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பகுதி, கல்லூரி வளாகத்திற்குள், கல்லூரி வளாகத்திற்கு வெளியே மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான இடங்களில் பாதுகாப்பு பணி என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கான முன்னேற்பாடு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு அடையாள அட்டை விநியோகம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு அடையாள அட்டை விநியோகம் நேற்று தொடங்கியது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70.58 சதவீதம் அதாவது 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு அலுவலர்களை பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. 6 சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியே வாக்கு எண்ணிக்கை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜை வீதம் மொத்தம் 84 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் ஒருவர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் ஒருவர் என ஒவ்வொரு மேஜைக்கும் 3 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.தபால் வாக்குகள் 7 மேஜைகளில் எண்ணப்பட உள்ளது. 120 நுண்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையே ஒரு தொகுதிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தலைமையில் 70 பேர் வீதம் 6 தொகுதிக்கு 420 பேர் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், பூத் ஏஜெண்டுகள் 1274 பேர், 13 வேட்பாளர்கள், 13 வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்கிறவர்களுக்கும் அடையாள அட்டை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது. இதனை அரசியல் கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் வாங்கி சென்றனர்.

The post பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி; 900 போலீசார் ஆயத்தம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,18th Parliamentary Election across ,India ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து