×

அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணை சரிதான்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும், நிதேஷ் உள்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ் மொழித்தாள், பொதுஅறிவு, திறனறிவு தேர்வுத் தாள்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆங்கில வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏற்கனவே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீதம் வழங்குவதைப் போலாகி விடும் என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்று அட்வகேட் ஜெனரல் கூறியிருப்பது சரியானதுதான். தமிழ் மொழித் தாள் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றுதான் அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டார்.

 

The post அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணை சரிதான்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...