×

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை

*ஆண்டிபட்டியில் அதிகரிக்கும் சாகுபடி

ஆண்டிபட்டி : மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படுத்தப்படும் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஜோராக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரங்களில் கோழிக்கொண்டை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. ஒரே பயிரை சாகுபடி செய்து நஷ்டத்தை சந்திப்பதாக கூறி வரும் விவசாயிகளுக்கு பூக்கள் சாகுபடி சற்று ஆறுதலை தரக்கூடியது. மலர் சாகுபடி செய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு தான். அதனால் பெரும்பாலும் இந்த பகுதியில் கோழிக்கொண்டை பூக்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த கோழிக்கொண்டை பூ செலோசியா கிரிஸ்டேட்டா என்ற தாவரவியல் பெயர் உள்ளது. இத்தாவரம் அழகு செடிகளாகவும் மற்றும் மாலைகளில் அழகு சேர்க்க மாலைகளுக்கு இடையே வைத்து கட்டவும் பயன்படுகிறது. மேலும் இத்தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பொதுவாக வளர்க்கப்படுகிறது. இலைகள் 2-4 அங்குல நீளம் மற்றும் பச்சை கலந்த ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். மலர்கள் அடர் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.

கோழிக்கொண்டை செடியின் பாகங்கள் உடல் சோர்வு, இதயம் சம்பந்தமான நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அதன் விதைகள் கல்லீரல் வெப்பத்தை அகற்றவும், கண்பார்வையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. கோழிக்கொண்டை செடியின் பூக்கள் மூச்சுத்திணறல், ரத்தக்களரி மலம், ரத்தக்கசிவு, இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அது மட்டுமின்றி கோழிக்கொண்டை செடியின் இலைகள் வயிற்றுப்போக்கு, மாதவிடாய் ரத்தப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதி உள்ள களிமண் மற்றும் செம்மண் நிலப்பகுதிகள் கோழிக்கொண்டை பயிரிட உகந்தது. மண்ணின் கார அமில தன்மை 6.5க்கும் அதிகமாக இருக்கக் கூடாது. அதே போல் நல்ல சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் கோழிக்கொண்டை நன்றாக வளரும் தன்மையுடையது. கோழிக்கொண்டை வளரும் பருவத்தில் அதிக வெளிச்சமும் பூ பூக்கும் சமயத்தில் குறைந்த அளவு வெளிச்சம் இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

விதை போட்டு நாத்து நட்டு..

கோழிக்கொண்டையை ஒரு ஏக்கர் நடவு செய்ய 400 கிராம் விதைகள் போதுமானது. எனவே ஒரு ஏக்கர் நடவு செய்ய 4 சென்ட் பரப்பளவு உள்ள இடம் நாற்றங்காலுக்கு தேவைப்படும். மேட்டு பாத்தி நாற்றங்கால் அமைத்து விதைகளை மணலுடன் கலந்து மேற்பரப்பில் விதைத்து விடவேண்டும், பொதுவாக கோழிக்கொண்டை விதைகள் 7-14 நாட்களிலில் முளைக்கும், எனவே விதைகள் முளைக்கும் வரையில் நாற்றங்கால் பாத்தியில் மூடாக்கு அமைத்து பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்று விட்டதில் இருந்து 30ம் நாள் நாற்றுகள் வயலில் நடுவதற்கு தயாராகி விடும்.

மகசூல் அள்ளலாம்

நடவு செய்த 60ம் நாளில் இருந்து மொட்டு விட ஆரம்பித்து விடும். பின்னர் பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும். 75வது நாளில் இருந்து பூக்களை அறுவடை செய்ய ஆரம்பித்து விடலாம். குறைந்த பட்சம் ஒரு செடியில் நான்கு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை பூக்கள் மகசூலாக கிடைக்கும்.

4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்

செடிகளை நடவு செய்யும் முன்னர் நடவு பாத்திகளில் நீர்பாய்ச்சி பின்னர் நடவு செய்ய வேண்டும். செடிகளை நட்ட மூன்றாவது நாள் உயிர் பாசனமும், பின்னர் மண்ணின் தட்ப வெட்ப நிலைகளை பொறுத்து 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 15ம் நாளில் ஒரு கை களையும், பின்னர் 40ம் நாளில் ஒரு கை களையும் எடுக்க வேண்டும்.

The post அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை appeared first on Dinakaran.

Tags : Theni district ,Andipathi ,
× RELATED கடமலை பகுதியில் நச்சுப் புகையை வெளியேற்றி செல்லும் தனியார் பஸ்கள்