*பொதுமக்கள் கோரிக்கை
ஆரணி : ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் பிரதான சாலையாக ஆற்காடு சாலையுள்ளது. இதனால், மாங்காமரம் பஸ்நிறுத்ததில் இருந்து ஆற்காடு செல்லும் இரும்பேடு கூட்ரோடு வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் 50க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த உயர்கோபுர மின்விளக்குகள் அனைத்தும் இரும்பேடு ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டு மின்கட்டணம் செலுத்துதல், பழுதடைந்த மின்விளக்குகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரணி-ஆற்காடு செல்லும் இரும்பேடு கூட்ரோடு வரையுள்ள சாலையில் உள்ள 10 க்கும் மேற்பட்ட உயரகோபுர மின்விளக்குகள் பழுதுடைந்துள்ளது.
இதனால், மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் சாலைகளில் இருள்சூழ்ந்துள்ளது. மேலும், இரும்பேடு கூட்ரோடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகிலும், கனரக வாகனங்கள், லாரிகளில் அதிகமாகவும் மிக உயரமாக லோடு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மோதி, 5க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் உடைந்து சாலைகளில் சாய்ந்து வயர்களுடன் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.
மேலும், உடைந்த அந்த கம்பங்கள் சரி செய்யாமல் சாலை ஓரங்களிலும், சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் நடுவில், போட்டு விட்டு பல மாதங்களுக்கு மேலாக துருபிடித்து பழுதடைந்து கிடப்பதால், அதனை மர்ம நபர்கள் சில இரவு நேரங்களில் சில கம்பங்களை திருடிச் சென்றுள்ளனர். பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருந்து வருவதால், இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள ஆரணி, ஆற்காடு, போளூர், செய்யார் ஆகிய நான்கு வழி சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்கம்பங்கள் பல மாதங்களாக உடைந்த ஆபத்தான நிலையிலும், மின் விளக்குகள் எரியாமல் இருந்து வருகிறது. இதனை, சரிசெய்யாமல் சாலை நடுவில் அப்படியே விட்டுள்ளனர்.
அதேபோல், பிரதான சாலையாக இருந்து வரும் இரும்பேடு கூட்ரேடு பகுதியில் இரவு முதல் அதிகாலை வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரும்பேடு கூட்ரோடு மையப் பகுதியில்உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுது ஏற்பட்டு எரியாமல் இருந்து வருவதால், அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் அப்பகுதியில் வெளிச்சலம் இல்லாமல் இருள்சூழ்ந்து வருகிறது.
ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோடு பகுதியில் உள்ள ஆற்காடு செல்லும் சாலைகளில் பல மாதங்களாக பழுந்தடைந்து ஆபத்ததான நிலையில் உடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்கள் அமைக்கவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆற்காடு செல்லும் சாலை இரும்பேடு கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.