×

பள்ளிகள் ஜூன் 6ல் திறப்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை

 

ஊட்டி, மே 29: ஊட்டிக்கு கோடை சீசன் போது வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளையே நம்பி ெதாழில் செய்யும் ஊட்டி வியாபாரிகளுக்கு இவ்விரு மாதங்கள் போனஸ் மாதங்கள். மற்ற மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படும். கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், இந்த வியாபாரிகளுக்கு ஓரளவு விற்பனையாகியது.

மாத இறுதி வாரம் என்பதால் தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால், மே மாதம் இறுதி வாரத்தில் சுற்றுலா பயணிகள் சற்று கூட்டம் குறைவாகவே காணப்படும். ஆனால், இம்முறை ஜூன் மாதம் 6ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால், மாத இறுதியிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது. கடந்த வாரம் மலர் கண்காட்சி முடிந்த பின்னும், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

நேற்றும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தனர். பொதுவாக, மே மாதம் கடைசி வாரத்தில் படிப்படியாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். ஆனால், இம்முறை இன்னும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் உள்ளதால், தற்போதும் ஊட்டியில் உள்ள சில முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. அதேபோல், சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

The post பள்ளிகள் ஜூன் 6ல் திறப்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooti ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...