×

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மே 30-ம் தேதி நிறுத்தம்: கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மே-30ம் தேதி நிறுத்தம் செய்யப்படுகிறது. மே 30-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகிறது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலானோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோப் கார் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறும்.

அதன்படி, நாளை மறுநாள் 30.05.2024 அன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மே 30-ம் தேதி நிறுத்தம்: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple ,Temple Administration ,Dindigul ,Palani ,Murugan ,Temple ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து