×

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக திகழ்ந்தபோது கிராமப்புறங்களில் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். இன்று முதலமைச்சராக வீற்றிருக்கும் நிலையில் கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

ஊராட்சி நிர்வாகம்.
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 லட்சம் என்பது ரூ.5 இலட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் என்பது ரூ.25 லட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 லட்சம் என்பது ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் உத்தமர் காந்தி விருது
முதலமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சராக திகழ்ந்தபோது, மாநிலத்தில் சிறப்பாகச் செயல்புரியும் கிராம ஊராட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்கும் பொருட்டு உத்தமர் காந்தி விருது வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இடையில் அந்த விருது திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நிறுவப்பட்டுச் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சத்திற்கான ஊக்கத் தொகையுடன், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்கான பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுகாதாரப் பணியாளர்கள் நலன் பேணப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டும் வழிமுறையாக (155340) என்ற எண்ணுடன் ஓர் உதவி மையம் (Help Desk) இயக்குநரகத்தில் 24X7 என்ற வகையில் முழுநேரம் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
கிராமப்புற பயனளிக்கும் இத்திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் பெண்கள் 86.16 சதவீதமும், மாற்றுத் திறனாளிகள் 2,87,461 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதமும் பயன் பெற்றுள்ளனர்.
இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப் படுவதன் மூலம் நீடித்த நிலைத்த வளர்ச்சியின் குறிக்கோள்களான பசியின்மை, வறுமையின்மை, பாலின வேறுபாடின்மை, ஆகியவை நம் நாட்டில் எய்தப்படும்.

நபார்ட் RIDF திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 550 கி.மீ நீளமுள்ள 287 சாலைப் பணிகளையும், 342 பாலங்கள் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள ரூ.1,221 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 193 கி.மீ நீளமுள்ள 107 சாலைப் பணிகள் மற்றும் 151 பாலங்கள் ரூ.354 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,208.88 கி.மீ. நீளமுள்ள 4,606 சாலைப் பணிகள்
ரூ.1,884.03 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளன.

சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை
ஊரகப் பகுதிகளில் சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தி சமத்துவத்தை ஏற்படுத்திட ஊரக வளர்ச்சித் துறையின் புதிய முயற்சியாக 9 மாவட்டங்களில் நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 10 எரிவாயு தகனமேடைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வீடு வழங்கும் திட்டங்கள் (Rural Housing)
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 2016-17 முதல் 2019-20 வரையிலும் திராவிட மாடல் ஆட்சிக்காலமான 2021-22 ஆம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,50,405 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016-17 முதல் 6.5.2021 வரையிலான காலகட்டத்தில் 2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,97,414 வீடுகள் 7.5.2021 முதல் 14.02.2024 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், காங்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு மொத்தமாக ரூ. 4,502.23 கோடி மாநில அரசால் விடுவிக்கப்பட்டது. இதுவரை திட்ட பயன்பாட்டிற்காக ரூ.4,035.65 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பெரியார் நினைவு சமத்துவபுரம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 24.6.2021 அன்று பேரவையில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 98% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 99% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

நமக்கு நாமே திட்டம் (ஊரகம்)
இத்திட்டத்தின் மூன்று ஆண்டுகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயன்பாட்டிற்காக 631 கட்டடங்களும், 73 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்த பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம், கதிரடிக்கும் களம் உட்பட 5,377 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டிற்கு 3 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டுகளில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ரூ.2,106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 5,209 கட்டடங்களும் 408 பிறதுறைக்கான கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம் எரிமேடை, சுடுகாடுகளுக்கு சுற்றுசுவர் போன்ற உட்கட்டமைப்புகள் உட்பட 26,920 பணிகள் எடுக்கப்பட்டு 16,247 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
2021-22 ஆண்டிற்கு ரூ.2 கோடியும் 2022-23 மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ.5 கோடி வீதம் என்ற நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 1,022 கட்டடங்களும் மற்றும் 74 பிறதுறைக்கான கட்டிடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம் மற்றும் கதிரடிக்கும் களம் ஆகிய 427 பணிகளும் உட்பட 6,097 பணிகள் எடுக்கப்பட்டு 3,128 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் அமைக்கும் பொருட்டு 2021-22-இல் இருந்து இதுவரை 1,44,489 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு இக்கால கட்டத்தில் 2,940 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டி கொடுக்கப் பட்டுள்ளன.

நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம்:
கிராமப்புறங்களில் தூய்மையை வலியுறுத்தும் “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” திட்டத்தின் மூலமாக 37 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் சுமார் 47,339 குப்பை கொட்டும் இடங்கள் 16,829 பொது இடங்கள், 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடிகள். 45,824 அரசு கட்டிடங்கள் / நிறுவனங்கள் 47,949 கிராமப்புற நீர் நிலைகள், 10,011 சமுதாய சுகாதார வளாகம், 15,69,348 மீட்டர் கழிவுநீர் வடிகால்கள் ஆகியவை சுமார் 14,31,591 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு நடவடிக்கைகளில் பங்கேற்று சுத்தம் செய்யப்பட்டன.

ஜல் ஜீவன் திட்டம்
2024ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடவும், தேவையான அளவிலும நிர்ணயிக்கப்பட்ட BIS 10500 தரத்திலும் வழக்கமான மற்றும் நீண்ட காலத் தேவைக்கு ஏற்பக் குறைந்த குடிநீர் சேவை கட்டணத்துடன் குடிநீர் விநியோகம் செய்வதே ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் கிராமப் புறங்களின் 63,63,379 வீடுகளுக்கு ரூ.2,010,29 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்: புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்
ஊரகப் பகுதிகளில் உள்ள 6,40,313 சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 58,746 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. 7.5.2021 முதல் 13.2.2024 வரை சுழல்நிதி ரூ.629.55 கோடி, சமுதாய முதலீட்டு நிதி ரூ.629.55 கோடி நலிவு நிலை குறைப்புநிதி ரூ.14.59 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,56,508 மகளிர் சுய உதவிக் குழக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.71,960.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு சுய உதவிக் குழுக்கள்
சமூக பொருளாதார விளிம்பு நிலையில் வாழ்வோரைக் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அவர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்ப்பதற்காகவும் இதுவரை 37,163 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் இத்திட்டத்தின் மூலமாக உருவாக்கப் பட்டுள்ளன, (முதியோர், ஊனமுற்றோர்)
திருநங்கைகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்) இதன் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 559 பேர்கள் பயனடைந்துள்ளனர்.

இதுவரை உருவாக்கப்பட்டுள்ள 37,163 சிறப்பு சுய உதவிக் குழுக்களில் 12,348 மாற்றுத் திறனாளிகள் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதுவரை 410.05 கோடி சுழல்நிதியாகவும் மற்றும் 24.09 கோடி ரூபாய் கிராம வறுமை ஒழிப்பு நிதியாகவும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 6,800 மாற்றுத்திறனாளி குழுக்களுக்குத் தொழில் துவங்கிடும் நோக்கில் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து 40.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலை வாய்ப்புத் திட்டம் தனிநபர் தொழில் முனைவு (SEP-I)
சுய வேலை வாய்ப்பு தனிநபர் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 21,190 தனி நபர்களுக்கு ரூபாய் 117.00 கோடியும், 12,503 குழுக்களுக்கு ரூபாய் 428.82 கோடியும் வட்டி மான்யத்துடன் கூடிய வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புரங்களில் செயல்படும் 1,29,630 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 5,266.21 கோடி வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புரங்களில் செயல்படும் 3,34,763 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 23,675.15 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் பணியமர்வு (EST&P)
45,150 நகர்ப்புர ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Principal Mu ,Stalin ,Government of Tamil Nadu ,Chennai ,Chief Minister Mu. K. ,Tamil Nadu government ,Minister of Rural Development and Internal Affairs ,Principal ,M.U. ,
× RELATED இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்...