×

பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே

 

குடியாத்தம், மே 28: கே.வி.குப்பம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக 2 மகளின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன்(45), குடிநீர் டேங்க் ஆபரேட்டர். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 16 வயது பிளஸ் 1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக கேட்டபோது, சுவாமிநாதன் பலமுறை தன்னை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாக மாணவி தெரிவித்தார். மேலும் மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுவாமிநாதனை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுவாமிநாதனுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2 மகள்களின் தந்தை போக்சோவில் கைது கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Pokso ,Gudiatham ,Swaminathan ,Periyar ,KV Kuppam, Vellore district ,POCSO ,
× RELATED கே.வி.குப்பம் அருகே அனுமதியின்றி நடந்த...