*அடியுரம் இடும் பணியில் விவசாயிகள் தீவிரம்
*நூண்ணூட்ட உரமிட வேளாண் துறை அழைப்பு
திருவாரூர் : நடப்பாண்டில் இலக்கை விட 2 ஆயிரத்து 500 ஏக்கர் கூடுதலாக 24,000 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பயிர்களுக்கு அடியுரம் இடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நூண்ணூட்டம் உரமிட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்தாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 92 ஆயிரத்து 285 ஏக்கர் இலக்கு நிர்ணயக்கப்பட்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்ற நிலையில் பின்னர் 2023, 24 காரீப் பருத்திற்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் குறுவை நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 596 விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 739 மெ.டன் அளவில் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.337 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரத்து 988 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடியானது 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்ற நிலையில் பின்னர் அறுவடையின் போது மாவட்டம் முழுவதும் 530 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணியானது நடைபெற்றது. அதன்படி, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 232 விவசாயிகளிடமிருந்து 4 லட்சத்து 30 ஆயிரத்து 177 மெ.டன் சம்பா நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் இதற்குரிய தொகையாக ரூ.1,322 கோடியே 59 லட்சத்து 945 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக பச்சை பயறு மற்றும் பருத்தி பயிர் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் போர்வெல் வசதியுள்ள இடங்களில் கோடை நெல் சாகுபடியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் கோட்டூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி என விவசாயிகள் இந்த கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் நடப்பாண்டில் இலக்கை விட கூடுதலாக 2 ஆயிரத்து 500 ஏக்கர் என 24 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு தற்போது அடியுரம் இடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களை இட்டால் அதிகளவில் மகசூல் கிடைக்கும் என்பதால் ஏக்கர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் நுண்ணூட்ட உரங்களை விவசாயிகள் இடுமாறும், இதற்கான நுண்ணூட்ட உரம் என்பது அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுவதால் அதனை வாங்கி பயனடையுமாறு வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
The post நடப்பாண்டில் இலக்கை விட 2 ஆயிரத்து 500 கூடுதலாக 24,000 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி appeared first on Dinakaran.