×

செங்குன்றம் பகுதியில் பழுதடைந்த உயர்கோபுர சோலார் மின் விளக்கை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

புழல், மே 27: செங்குன்றம் பகுதியில் பழுதடைந்துள்ள சோலார் உயர்கோபுர மின் விளக்கை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.கே.காந்தி தெரு-பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் வசதிக்கென பேரூராட்சி சார்பில் சோலார் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கடந்த சில ஆண்டுகளாக சோலார் உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், இருட்டைப் பயன்படுத்தி செயின்பறிப்பு, வாகன திருட்டு போன்ற குற்ற சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது.

இதுதொடர்பாக 18வது வார்டு கவுன்சிலர் கோதண்டராமன், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்கென அமைக்கப்பட்ட சோலார் உயர்கோபுர மின் விளக்கை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செங்குன்றம் பகுதியில் பழுதடைந்த உயர்கோபுர சோலார் மின் விளக்கை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sengunram ,Puzhal ,Senkunram ,MK Gandhi Street-Pillaiyar Koil Street ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் சாமியார் மடம் சிக்னலில்...