சென்னை: மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக சென்னையில் மீன் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. ஏப்ரல் 15 தொடங்கி, ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடித்தடைக்காலம் இருப்பதால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமரம், பைபர் படகுகளில் சென்று குறைந்த அளவில் மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு துறைமுகத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் அதிக அளவில் திரண்டனர். ஆனால் மீன் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் அதிகமாக இருந்தது. சங்கரா மீன் கிலோ ரூ.800க்கும், சீலா ரூ.500, குட்டி சுறா ரூ.500, பாறை ரூ.600, இறால் ரூ.450, நெத்திலி ரூ.350, காணங்கத்தை ரூ.450க்கும் விற்கப்பட்டது. அதேநேரத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால், நேற்று அங்கும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
* கோழிக்கறி விலை எகிறியது
கிலோ கோழிக்கறி இதுவரை ரூ.260க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.20 அதிகரித்து ரூ.280க்கும், சில இடங்களில் கிலோ ரூ.300 வரையும் விற்கப்பட்டது. மீன், கோழி இறைச்சி விலை அதிகரித்த போதிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கிச் சென்றனர்.
The post மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.