தர்மபுரி, மே 26: செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும், செட்டிக்கரை வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிசிடிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் அறை, வாக்கு என்னும் அறையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணும் அறையில் மின்சார வசதி, மின்விளக்குகள், மின்விசிறி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மீடியா சென்டர் அமைய உள்ள இடத்தையும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் அமர்வதற்காகவும், ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டவுடன், சுற்று முடிவு உரிய படிவத்தில், வேட்பாளர் அல்லது அவரது முதன்மை முகவரிடம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது தொடர்பு அறை ஆகியவற்றில் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது, டிஎஸ்பி நாகலிங்கம், தனி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post அரசு பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.