சென்னை, மே 26: வங்க கடலில் உருவாகியுள்ள ரேமல் புயல் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி சென்னையில் இருந்து நேற்று காலை 5.05 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு அந்தமான் செல்லும் விமானம், அதேபோல் காலை 7.55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட்டு காலை 10.20 மணிக்கு சென்னை வந்து சேரும் விமானம் ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், அந்தமானுக்கு கொல்கத்தாவில் இருந்து செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து செல்லும் விமானம், அதேபோல் அந்தமானில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மண்டலம் ரேமல் புயலாக வலுப்பெற்று, அந்தமான் மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்தமானுக்கு இயக்கப்படும் இண்டிகோ மற்றும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
The post அந்தமான் விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.