குத்தாலம், மே 25: குத்தாலத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் குடையால் முகத்தை மறைத்துக்கொண்டு பிரமாண்ட குடியிருப்பு வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வியாபாராசெட்டி தெருவில் அன்பு காம்ப்ளக்ஸில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். தொடர்ந்து காம்ப்ளக்ஸில் தங்கி இருக்கக்கூடியவர்கள் தரைத்தளத்தில் அனைவரது இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். இந்த நிலையில் தொடர்ந்து அப்பகுதியை மர்ம ஆசாமி ஒருவர் வாகனங்களை நோட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை குடியிருப்பு வளாகத்திற்கு டிப்டாப் உடையுடன் வந்த மர்ம ஆசாமி சிசிடிவி இருப்பதை அறிந்து உடனடியாக குடையைக் கொண்டு தனது முகத்தை மறைத்தவாறு உள்ளே வந்துள்ளார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜூபிடர் இருசக்கர வாகனத்தை சாதுரியமாக தள்ளி சென்று திருடியுள்ளார். இக்காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கக்கூடிய வாகனத்தின் உரிமையாளர் சங்கரன் மகன் சுந்தரம் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
The post குத்தாலத்தில் குடியிருப்பு வளாகத்தில் நூதனமுறையில் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.