திருப்பூர், மே 25: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் ஆட்ரே அர்பிதா, மோகன பிரியா உள்ளிட்ட 9 மாணவிகள் பொங்கலூர் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொங்கலூர் வட்டார விவசாயிகளுக்கு விளக்கு பொறி மற்றும் ரினோலியூர் பொறி குறித்த செயல் விளக்கம் அளித்தனர். இது குறித்து மாணவிகள் கூறியதாவது: பயிர்களில் இலை மடக்கு, புழு வெள்ளை ஈ மற்றும் ஒலிக்கீர்க்கப்படும் அனைத்து வகையான பூச்சி வகைகளை விளக்கு பொறி கொண்டு கட்டுப்படுத்தலாம்.
இதுபோல் தென்னை மரங்களை அதிக அளவில் சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த ரினோலியூர் பொறி பயன்படுகிறது. இந்த பொறியில் பயன்படுத்தப்படும் 4 மெத்தில் ஆக்டோனோயேட் என்னும் வேதிப்பொருள் காண்டாமிருக வண்டுகளை ஈர்க்கும் இன கவர்ச்சி பொருளாக செயல்படுகிறது. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இந்த பொறிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விவசாயிகளுக்கு விளக்கு பொறி குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.