தர்மபுரி: பாலக்கோடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கானாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (67). விவசாய கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான முனுசாமி (65), பச்சை (79) ஆகியோரும் நேற்று பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டியில், உறவினர் வீட்டு துக்கம் விசாரிப்பதற்காக ஒரே டூவீலரில் புறப்பட்டனர்.
வண்டியை மணி ஓட்டிச் சென்றார். பாலக்கோடு -ராயக்கோட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், எர்ரன அள்ளி பகுதியில் மாலை 5.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பெல்ரம்பட்டிக்கு செல்லும் பிரிவு சாலை தெரியாமல் தவித்தனர்.
இதையடுத்து, கருத்தானூர் அருகே டூவீலரை திருப்பியுள்ளனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
The post டூவீலர் மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.