கோபி: கோபி அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. சுமார் 15 அடி உயரத்திலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டும். 300 மீட்டர் நீளமுள்ள இந்த அணையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குளிக்க முடியும் என்பதாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
இந்நிலையில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்ததின் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும், தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், அணையில் இருந்து பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுகின்றது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
The post வெள்ளப்பெருக்கு எதிரொலி; கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.