சென்னை: முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ், இவர் ஆட்சிப் பணியாளராகவும் சில காலம் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, புதிய பங்களா கட்டியதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அவர் சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை காதலித்து 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர். காதல் மனைவியை கையில் வைத்துக்கொண்டு ராஜேஷ் தாஸ் உடன் பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பீலா தனது கணவர் ராஜேஷை விவாகரத்து செய்ய திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பீலாவின் விவாகரத்து மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் பாலியல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பீலா தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. தையூரில் உள்ள பீலாவின் பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து காவலாளியை மிரட்டிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.