×

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை லாரி மீது அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்: அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு


உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த திடீர் விபத்தால் அரசு பேருந்தின் பின்னாள் வந்துகொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் மற்றும் நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த கார்த்திக் (33) அனீஸ்குமார் (25), சோமசுந்தரம் (48), கண்ணன் (50), கவிதா (49), முத்துக்குமார் (35), முருகன் (41), முத்துப்பிரியா (17), பாஸ்கர்ராஜா (39) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து எட்டு வாகனங்கள் அடுத்தடுத்து தேசிய நெடுஞ்சாலையில் மோதி கொண்டதால் ஆசனூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை லாரி மீது அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்: அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Asanur ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு...