×

மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி

சென்னை: பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் அனைத்து பள்ளி கல்வித்துறையின் EMIS இணையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிவேற்றம் பணி நடக்கிறது.

ஆனால் சில நேரங்களில் சில மாணவர்களின் குறிப்பிட்ட சில விவரங்கள் விடுபட்டுப் போவதால் தேர்வு நேரத்திலும், தேர்வுக்கு பிறகும் அவர்களை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை. மேலும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்தல், தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்களா என்று அறிந்து கொள்ளவும் செல்போன் எண்கள் தேவையாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. அத்துடன் பெற்ற எண்களுக்கு தொடர்்பு கொண்டு ஓடிபி எண்களையும் கேட்டு வருகிறது. அதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்து ஓடிபி எண்களை சொல்ல மறுக்கின்றனர். எனவே, ஓடிபி எண்கள் பெறுவது மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை பெற்றோருக்கு தெரிவிப்பதற்காகவே என்று பள்ளிக்கல்வி்த்துறையின் சார்பில் விளக்கம் அளித்த பிறகு, தற்போது பெற்றோர் தாங்களாகவே முன்வந்து ஓடிபி எண்களை சொல்லி தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும் பள்ளிக் கல்வித்துறையும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கண்காணிக்க முடியும் என்ற நிலை உருவாகிவருகிறது. பள்ளிக்கு இன்று மாணவர் வரவில்லை என்றால் அந்த தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும், பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் செய்து விட்டு வெளியில் சென்று விட்டாலும் அந்த விவரங்களும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும். இது தவிர மாணவர்கள் முறைகேடாக பள்ளிகளில் நடந்து கொண்டாலும், போதைப் பொருள்கள் பயன்படுத்தினாலும் அதுகுறித்த தகவல்களும் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். இதற்காக பெற்றோர் எண்களை இணைத்து பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த குழுவில் இணையும் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், பாடங்களை கற்கும் விதம் குறித்த விவரங்களும் அனுப்பி வைக்கப்படும். எந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர், அதற்காக பெற்றோர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரையில் 1 கோடியே 35 லட்சம் பேர் செல்போன்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் உடனடியாக வரும் கல்வி ஆண்டு முதல் அமுல்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும் வெளியில் செல்ல முடியாது, பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும் முடியாது.

The post மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி...