×

5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: ராகுல், ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்பட 695 பேர் போட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 5ம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில், ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களுடன் 695 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது.

இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இதில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், பீகார் முன்னாள் முதல்வரின் மகள் ரோகிணி ஆச்சார்யா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், காஷ்மீர் முன்னாள் முதல்வரான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் 5ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.
ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், 2வது தொகுதியாக உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியிலும் இம்முறை போட்டியிடுகிறார்.

இத்தொகுதி காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. இதுவரை சோனியா காந்தி போட்டியிட்டு வந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவர் மாநிலங்களவை எம்பியாகி உள்ளார். இதனால் முதல் முறையாக ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் உபி அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். உபியின் அமேதி தொகுதியில் 3வது முறையாக ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 தேர்தலில் இதே தொகுதியில் ஸ்மிருதி இரானி ராகுலிடம் தோற்ற நிலையில், 2019ல் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ராகுலை ஸ்மிருதி வென்றார். உபியின் லக்னோவில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சமாஜ்வாடி சார்பில் ரவிதாஸ் மெரோத்ரா களமிறங்கி உள்ளார்.

இத்தொகுதியில் கடந்த 2019ல் ராஜ்நாத் சிங் 6.33 லட்சம் வாக்குகள் பெற்று சமாஜ்வாடி வேட்பாளரையும், 2014ல் 5.61 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரையும் வென்று ஹாட்ரிக் வெற்றியை நோக்கி போட்டியிடுகிறார். உபியின் கேசர்கஞ்ச் தொகுதி பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை பிரிஜ் பூஷணுக்கு பதிலாக இத்தொகுதியில் அவரது மகன் கரண் பூஷண் சிங்கை பாஜ களமிறக்கி உள்ளது.

அவரை எதிர்த்து சமாஜ்வாடியின் ராம் பகத் மிஸ்ரா போட்டியிடுகிறார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கி உள்ளார். அவர் சரண் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அவரை எதிர்த்து பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2014ல் ராஜிவ் பிரதாப், லாலுவின் மனைவி ரப்ரி தேவியையும், 2019ல் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவின் மாமனார் சந்திரிகா ராயையும் வென்று தற்போது ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறார்.

அவரை ரோகிணி வீழ்த்தி பழி தீர்ப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சந்திரா ராமை எதிர்த்து போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2014ல் ராம் விலாஸ் பஸ்வானின் 2019ல் லோக் ஜனசக்தியன் பசுபதி குமார் பராசும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மும்பை வடக்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் காங்கிரசின் பூஷண் படேலை எதிர்த்து போட்டியிடுகிறார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் பயாஸ் அகமது மிர்ரையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் சஜித் கனி லோனையும் எதிர்த்து போட்டியிடுகிறார். இவர்களுடன் மொத்தம் 695 வேட்பாளர்கள் 5ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் மேற்கு வங்கத்தில் இம்முறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 4ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவின் போது அம்மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து இம்முறை 25,590 மாநில போலீசாருடன் 650 கம்பெனி மத்திய படையினரும், 567 அதிவிரைவு நடவடிக்கை குழுவினரும் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் நடக்கும் 13,481 வாக்கு மையங்களில் 7,711 மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஹேமந்த் சோரன் மனைவி போட்டி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று 3 மக்களவை தேர்தலுடன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் காண்டே சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார். ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 4 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலும் நடந்து வருகிறது. இதில் 2ம் கட்டமாக இன்று 35 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் ஹின்ஜிலி, கன்டபன்ஜி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

* இன்னும் 2 கட்டமே
இன்றுடன் 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிகிறது. எஞ்சிய 115 தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மே 25ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 7ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 2 கட்ட தேர்தல் முடிந்ததும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

* மகாராஷ்டிராவில் தேர்தல் முடிகிறது
இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்றைய 5ம் கட்டத்துடன் மகாராஷ்டிரா (மொத்தம் 48 தொகுதி), லடாக்கில் (1) வாக்குப்பதிவு முடிவடைகிறது.

The post 5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: ராகுல், ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்பட 695 பேர் போட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Rahul ,Rajnath Singh ,Omar Abdullah ,New Delhi ,Rahul Gandhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...