×

உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற மண், நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யுங்கள்: வேளாண் அதிகாரி ஆலோசனை

சிவகங்கை, மே 19: உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் 2008ம் ஆண்டு முதல் மண் பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வருடந்தோறும் சுமார் 12,000 மண் மாதிரிகள் விவசாயிகள் நிலங்களிலிருந்து எடுக்கப்பட்டு மண் பகுப்பாய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (மண்வளம் மற்றும் மண்நலம்) திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 89 கிராம பஞ்சாயத்துகளில் 8900 மண் மாதிரிகள் மற்றும் இதர கிராமங்களில் 2000 என மொத்தம் 10,900 மண் மாதிரிகள் சேகரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பயிர் சாகுபடியின் போது பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் கரிமச் சத்துக்கள் என16 வகையான சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமாக உள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே வகையான பயிர்களை பயிரிடுவதாலும் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாலும் மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து எதிர்பார்க்கப்படும் அளவு மகசூல் கிடைப்பதில்லை.

எனவே விவசாயிகள் தங்களின் நிலத்தின் மண்ணில் உள்ள சத்துக்களை மண்மாதிரி பகுப்பாய்வு செய்து அதில் பரிந்துரைக்கப்பட்ட உரங்களைப் பயன்படுத்தி உரச்செலவைக் குறைப்பதோடு சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்து அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் மண்ணுயிர் காப்போம் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரமிடுதல், திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மண்புழு உரக்கூடம் அமைத்தல், வரப்பில் ஆடாதொடா நடவு செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருகி மண் வளம் காக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது 9789369878 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது மண் மற்றும் பாசன நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய மாதிரி ஒன்றிற்கு ரூ.30 செலுத்தி பகுப்பாய்வு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற மண், நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யுங்கள்: வேளாண் அதிகாரி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District ,Agriculture ,Joint Director ,Thanabalan ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...