திருவண்ணாமலை, மே 19: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் 23ம் தேதி இரவு உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் அண்ணாமலையாரே மலை வடிவாக எழுந்தருளியிருப்பதால், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து (கிரிவலம்) சென்று வழிபடுகின்றனர்.
அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 22ம் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு தொடங்கி, 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 22ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதோடு, தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால், வரும் பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்திட மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழக்கம் போல சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதோடு, வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆரணி, ஆற்காடு வழியாக 44 பஸ்களும், காஞ்சிபுரம், வந்தவாசி வழித்தடத்தில் 11 பஸ்களும் வழக்கமாக தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 30 பஸ்கள் உள்பட மொத்தம் 85 பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்திருக்கிறது. அதுதவிர, சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம், செஞ்சி வழியாக வழக்கம் ேபால தினமும் 90 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் * சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில் இயக்கம் * பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு திருவண்ணாமலையில் வரும் 22ம் தேதி appeared first on Dinakaran.