×

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!!

புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கள்கிழமை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார் அளித்தார்.

அதில் , “முதல்வர் வீட்டுக்கு சென்றபோது பிபவ் குமார் அனுமதி மறுத்து, முழு பலத்துடன் என்னை தாக்கினார். மாதவிடாயில் இருந்த நான் வலியால் துடித்து, கதறிய போதும் முழு பலத்துடன் 7, 8 முறை கன்னத்தில் அறைந்தார். என்னை காலால் உதைத்தார். ஆனால் அங்கிருந்த யாரும் என்னை காப்பாற்ற வரவில்லை” என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர். அப்போது ஸ்வாதி மாலிவால் தனக்கு நேர்ந்ததை நடித்து காட்டினார். இதனிடையே ஸ்வாதி மாலிவாலை நேற்று காலை திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது நீதிபதி முன் தனக்கு நேரிட்டதை வாக்கு மூலமாக மாலிவால் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக “மாலிவால் மீது அப்படியொரு தாக்குதல் நடத்தப்படவே இல்லை” என ஆம் ஆத்மி அமைச்சர் அடிசி கூறியுள்ளார்.

இதுகுறித்து அடிசி புதிய காணொலியை வௌியிட்டுள்ளார். அதில், முதல்வர் இல்லத்தில் பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த ஸ்வாதி மாலிவால் முதல்வர் வீட்டு காவலர்களை திட்டுகிறார். பின்னர், பாதுகாவலர்களை மீறி முதல்வர் அறைக்குள் செல்ல முயலும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை பிரச்னைகளில் சிக்க வைக்க பாஜ சதி செய்வதாக அமைச்சர் அடிசி குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை செய்து வருகின்றனர்.இதனிடையே கெஜ்ரிவால் உதவியாளர் மீது ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தது பாஜகவின் திட்டமிட்ட நாடகம் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கெஜ்ரிவால் நற்பெயரை கெடுக்க பாஜக சதி செய்வதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

The post ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!! appeared first on Dinakaran.

Tags : Atmi M. B. ,Chief Minister Kejriwal ,Bibhav Kumar ,Swati Maliwal ,New Delhi ,Swati ,Maliwal ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...