×

காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது

திருவாரூர், மே 17: திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 37 ஆயிரத்து 757 பள்ளி குழந்தைகள் பயன்பெற்று வரும் நிலையில் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் பெற்றோர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக்குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடியபயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி-வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணித ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத்திட்டம், வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் திட்டம், கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பெண்கள் தங்களது வாழ்கையில் முன்னேறி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மாணவிகளின் மேற்படிப்பினை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமும் அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய திட்டம் மூலமும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு உயர்த்தப்பட்டு வருவதன் காரணமாகவும், பெற்றோர்களும், மாணவர்களும் அரசு பள்ளிக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது துவக்கப்பள்ளி மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு தவறாமல் வரவழைக்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஊரக பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளை யொட்டியுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இருந்து வரும் அனைத்து அரசு துவக்க பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் உணவருந்தினார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 10 ஒன்றியங்களிலும் 750 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளையொட்டிய 27 பள்ளிகள் என மொத்தம் 777 பள்ளிகளில் இந்த திட்டம் கடந்தாண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்பட்டு இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படித்து வரும் 37 ஆயிரத்து 757 ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

The post காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Government ,DMK ,government ,Tamil Nadu ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...