×

தங்கச்சிமடத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி

ராமேஸ்வரம், மே 17: ராமேஸ்வரம் தீவில் 6 செ.மீ கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்தது. ராமேஸ்வரம் தீவில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்ய துவங்கிய மழை பகல் வரை தொடர்ந்து பெய்தது. தீவில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது கோடை மழையா பருவ மழையா என்கிற அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக மே 19 வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக தங்கச்சிமடம் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கி இருபுறமும் உள்ள கரைகளை எட்டியது.

இதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றனர். பேருந்து நிறுத்தம் பகுதி முழுவதும் குளம் போல் மழைநீர் சூழ்ந்ததால் வெளியூர் மற்றும் நகர் பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் நிற்க முடியாத நிலை உருவானது. இதனால் அருகில் உள்ள பேருந்து நிறுத்ததிற்கு சென்றனர்.

The post தங்கச்சிமடத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி appeared first on Dinakaran.

Tags : Thangachimad ,Rameswaram ,Rameswaram island ,Rameswaram Thangachimadam… ,Thangachimadam ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை