சென்னை: தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது, வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப்பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, போதைப்பொருள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்திட ஏதுவாக பிரத்யேகமாக வாட்ஸ்அப் எண்ணும் (94981 11191) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராவ் ரத்தோர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். துறை வாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
* போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
* போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
* இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து. போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்.
* துறை வாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
The post இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.