×

சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது

சென்னை: ‘சொன்னதை செய்வோம் – செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம். சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரின் சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இதுகுறித்து திமுக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
‘சொன்னதை செய்வோம் – செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சொன்னதை செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்’ என்று முழங்கி தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

அவற்றுள் முக்கியமானவை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் கனவு இல்லம் திட்டம். மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப் பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்துடன் தன்னார்வலர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம்.

சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடவும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும் ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்’.
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றும் வேலைக்கேற்ற திறன் இல்லாதவர்களாகக் காணப்படும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளை பெற வழிவகுக்கும் ‘நான் முதல்வன் திட்டம்’. கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துகள் குறைபாடுடைய 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் செய்து மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை பிரித்தறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்குவதற்கு வழிவகை செய்யும் ‘ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்.

1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல் எண்ணறிவு ஆகியவற்றை கற்று அதனை உறுதிப்படுத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம். 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை ₹1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்னும் ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை எய்தும் வகையில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி திட்டம்’.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்”. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’. அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சமூக அமைப்புகள், பெரும்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியோருடன் இணைந்து பள்ளிகள் மேம்பாடு அடைவதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம்.

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’. நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே – குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட ‘மாபெரும் தமிழ் கனவுத் திட்டம்’.

இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளை ₹4,000 கோடியில் மேம்படுத்தும் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம்’. தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகையை அரசு மானியமாகவும் 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கி கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமாகவும் அளித்து ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களையும் மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பயனாளிகளை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறியும் புதுமையான ‘நீங்கள் நலமா?’ திட்டம்.

ஆண்டுக்கு ₹200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ₹1000 கோடி செலவில் ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்’ என தமிழ்நாடு முதல்வர் சொல்லியதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி நடைமுறைப்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Tamil Nadu ,Chennai ,Dimuka ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...