×

மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு பஸ்சிலிருந்து கழன்று ஓடிய டயர்: 25 பயணிகள் தப்பினர்

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சிலிருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 25 பயணிகள் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 12 மணி அளவில் புறப்பட்ட ‘ஏ8’ என்ற அரசு டவுன் பஸ் வடரங்கம் சென்று கொண்டிருந்தது. இதில் 25 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் அன்பழகன் ஓட்டினார். கண்டக்டராக இங்கர்சால் இருந்தார்.

இந்த பஸ் பனங்காட்டங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் இடதுபுற முன் டயர் கழன்று பஸ்சுக்கு முன்னே தனியாக சாலையில் 10 மீட்டர் தூரம் வரை ஓடியது. அதிர்ச்சியடைந்த டிரைவர், சமயோசிதமாக சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். இதனையடுத்து பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். டிரைவர் கவனக்குறைவாக இருந்திருந்தால் அருகில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

The post மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு பஸ்சிலிருந்து கழன்று ஓடிய டயர்: 25 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Kollidam ,Mayiladuthurai district ,Sirkazhi ,station ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி