×

வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தற்போது வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், வழக்கம்போல கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகளவில் இருந்தது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் வெயில் கொளுத்தியது. சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வருகிறது. வெயில் காரணமாக வெப்ப அலை வீசியதால், திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்பட்டனர். இதை அறிந்த தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி, சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால் பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களுக்கு இதுபற்றி அறிவுரை வழங்கும்படி இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் நேற்று அறிவுறுத்தி உள்ளார்.

The post வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Industrial ,Safety ,Tamil ,Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...