×

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நாளை துவங்கி வரும் 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாள் மட்டுமே நடத்தப்படும். இந்த ஆண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ஏற்கனவே பூங்காவில் நடப்பட்ட பல லட்சம் மலர் நாற்றுகளில் தற்போது கோடிக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதில் சிறப்பம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவரும்விதமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில், மலர் வீடு, மலர் இதழ்கள் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மலர் கண்காட்சியில் 25,000 மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. இதில் தனியார் பங்கேற்பாளர்களும் தங்களது மலர்களை பார்வைக்காக வைக்க உள்ளனர்.

மேலும் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக பூங்கா அலுவலகம் அருகே ‘ஐ லவ் கோடை’ என்று சால்வியா மலர்களால் செல்பி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு சுற்றுலாப்பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மலர் கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் ஆய்வு செய்தார். மலர் கண்காட்சியுடன் கோடை விழாவும் நடைபெற இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கேயும் இருக்கு ‘360’ கொடைக்கானல் மலர் கண்காட்சியில் முதன்முதலாக சுற்றுலாப்பயணிகளுக்காக 360 டனல் என்ற ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்கான புதிய கருவி அமைக்கப்பட உள்ளது. இந்த கருவியில் நின்று கொண்டு தங்களது செல்போன் கேமரா மூலம் 360 டிகிரி சுழன்று வீடியோ எடுத்து கொள்ள முடியும். இதன்மூலம் சுற்றிலும் உள்ள மலர் கூட்டத்தை கவர் செய்ய முடியும்.

The post கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal's Bryant Park flower show ,Kodaikanal ,Bryant Park, Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு