×

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60), கடந்த 4ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் பின்புற தோட்டத்தில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. உடல் மீட்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள், செல்போன் விவரங்கள், ஜெயக்குமாரின் ஒரு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை மற்றும் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திசையன்விளை, உவரி, குட்டம், ஆனைகுடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் போக்கு மற்றும் விசாரணை குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் மற்றும் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nella ,Congress ,Jayakumar ,president ,Eastern District Congress ,Rice ,East District Congress ,Jayakumar Tanasing ,Karaisutuputur ,Nellu Congress ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...