×

கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!

சென்னை: கோடை வெப்ப அலையிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடுமையான வெப்பஅலை வீசுவதால், கால்நடைகளைப் பராமரித்திட சென்னை மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான சுத்தமான குடிநீரை, குடிநீர் தொட்டிகளில் நிரப்பி வைக்க வேண்டும். கால்நடைகளை திறந்தவெளியிலும், சாலைகளிலும் விடாமல் பாதுகாப்பான இடங்களிலும், கொட்டகைகளிலும் பராமரித்திட வேண்டும்.

கருவுற்றுள்ள/பாலூட்டும் கால்நடைகள் மற்றும் இளங்கன்றுகளை பாதுகாப்பான நிழலான பகுதிகளில் பராமரித்திட வேண்டும். கடுமையான வெப்பத்தினால் பாதிப்படைந்த கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களுக்கு சென்று உரிய சிகிச்சை‘ மேற்கொண்டு பாதுகாப்பான இடங்களில் வைத்திட வேண்டும்.

ஆட்டுக்கொட்டகைகள், மாட்டுத் தொழுவங்கள் மற்றும் கோழிக் கொட்டகைகளை பகல் நேரங்களில் ஈரமான சாக்குப்பைகளை கொண்டு கட்டிவைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான உலர் தீவனம் மற்றும் புல்கரணைகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை வளர்ப்போர் தங்களது செல்லப்பிராணிகளை திறந்த வெளியில் விடாமலும், மகிழுந்துகளில் தனியே பூட்டி வைத்து செல்லாமலும் உரியமுறையில் பராமரித்திட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

The post கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,district ,Collector ,Mrs. ,Rashmi Siddharth Jagade ,Chennai district ,
× RELATED உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து...