×

நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளை தடுக்க ஊட்டி சுற்று வட்டார முக்கிய சாலைகளில் நிலச்சரிவு அபாய இடங்களில் சாயில் நெய்லிங் பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவுகளில் புற்கள் வளர்க்கும் தொழில்நுட்பம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மழை உள்ளிட்டவற்றால் பேரிடர்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளாக 284 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 68 இடங்களும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 89 இடங்களும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 79 மற்றும் குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 48 என கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 49 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமாக சாலைகளில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தடுப்பு சுவர்கள் கட்டப்படுகின்றன. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்பாராத அதி கனமழை போன்ற காரணங்களால் நீர்வழிபாதைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் தடுப்புசுவர் கட்டுவதாலும் முழுமையாக தீர்வு காண முடிவதில்லை.

இந்நிலையில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அதனை தடுக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியில் மண்ணில் இரும்பு கம்பிகள் பொருத்தி கம்பி வலை பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2021ம் டிசம்பர் மாதம் சோதனை முயற்சியாக ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் கட்டபெட்டு அருகே பாக்கியா நகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

சாயில் நெய்லிங் எனப்படும் மண்ணில் இரும்பு கம்பி அமைத்து ஜியோ கிரிட் மூலம் மண் உறுதி தன்மையை அதிகரித்து கம்பி வலைகள் விரிப்பு பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் அதன் மீது புல் விதைகள் தூவப்படும். இதன் மூலம் செடிகள் நெருக்கமாக வளரும். இதன் மூலம் நிலச்சரிவு தடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட கோடப்பமந்து பகுதி மற்றும் பாக்கியா நகர் பகுதியில் புற்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளன. இதன் மூலம் இத்திட்டம் வெற்றியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து எல்லநள்ளி கேத்தி சாலையில் இரு இடங்களில் முழுமையாக அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வையில் இத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து, மடித்தொரை பகுதிகள், குன்னூர் – கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு, ஊட்டி – மஞ்சூர் சாலையில் இத்தலார் பகுதிகளில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தனியார் நிறுவன பொறியாளர் பொன்னையா சந்திரன் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சாலைகளில் நிலச்சரிவுகளை தடுக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக சாயில் நெய்லிங் பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் மண் சரிவுவை தடுக்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்த நிலையில், தற்போது கோத்தகிரி சாலை, குன்னூர், மஞ்சூர் சாலைகளில் இத்தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,Nilgiris district ,South-West ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழை துவங்குவதால்...