×

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு

சேலம்: சேலம் பெண்கள் சிறையில் முதன்முதலாக பிளஸ் 1, பிளஸ்2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற கைதிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேர், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். கனிவளவன் என்ற தண்டனை கைதி 451 மதிப்பெண்ணும், சுரேஷ் என்ற விசாரணை கைதி 430 மதிப்பெண்ணும், செக் மோசடி வழக்கில் கைதாகி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமுதவள்ளி 426 மதிப்பெண்ணும் பெற்றனர். சேலம் பெண்கள் சிறையை பொறுத்தவரை, அடிப்படை கல்வி மற்றும் 8ம்வகுப்பு தேர்வை மட்டுமே, கைதிகள் இதுவரை எழுதியுள்ளனர். முதன்முதலாக, அமுதவள்ளி பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதிய இவர், அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. இவ்வாறு பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதலாம். அதன் பிறகு, தோல்வி அடைந்த பாடத்தை படித்து, மீண்டும் தேர்வை எழுதலாம். அதன்படி, பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த அமுதவள்ளி, சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வையும், அதனை தொடர்ந்து பிளஸ் 1 தேர்வையும் எழுதினார். இதில் பிளஸ் 2 தேர்வில் 331 மதிப்பெண் பெற்றார்.

அதே போல், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வில், 426 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், அனைவருக்கும் பேனா பரிசளித்தார்.

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் – ரேவதி தம்பதியின் மகள்கள் சந்தியா, சவுமியா. இரட்டையர்களான இவர்கள், அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தனர். பின்னர் செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதினர்.

நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இரட்டை சகோதரிகள் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.

The post சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Salem Women's Prison ,Salem ,Salem Central Prison ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்