×

என் மீது பாஜவுக்கு பயம்; அதனால் கைது செய்தனர்: கெஜ்ரிவால் பிரசாரம்

சண்டிகர்: ‘என்னைப் பார்த்து பாஜ பயப்படுகிறது. அதனால்தான் என்னை கைது செய்தனர்’ என குருஷேத்ராவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். அரியானாவின் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குப்தாவை ஆதரித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பெஹோவா பகுதியில் நேற்று வாகன பேரணி நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. மார்ச் 21ம் தேதி என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். இதற்கு என்ன அர்த்தம், கெஜ்ரிவால் பிரசாரம் செய்யக் கூடாது என அவர்கள் விரும்பினர். அவர்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதனால் கைது செய்தார்கள்.

எனக்கு பெஹோவாவில் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். எனது இளைய சகோதரரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் சின் மானின் மனைவி குடும்பம் பெஹோவைச் சேர்ந்தவர்கள். எனவே உங்களிடம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பி ஒரு ஓட்டு கூட (பாஜவுக்கு) போடக் கூடாது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

அரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி 6ம் கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

The post என் மீது பாஜவுக்கு பயம்; அதனால் கைது செய்தனர்: கெஜ்ரிவால் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Kejriwal ,Chandigarh ,Delhi ,Chief Minister ,Kurushera ,Kejriwal Behowa ,Aam Aadmi Party ,Sushil Gupta ,Haryana ,Kurushetra ,Lok Sabha ,BJP ,
× RELATED சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: கெஜ்ரிவால் காட்டம்