×

நடிகர் கவுண்டமணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: நிலத்தை ஒப்படைக்கவும் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதையடுத்து கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூ.3 கோடியே 58 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, கடந்த 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், 2003ம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக்கூறி கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘‘நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கட்டுமான நிறுவனத்தின் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிடத்தை முடித்து கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விதிகளை மீறி செயல்ப்பட்டுள்ளனர். எனவே இந்த மனுவை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இதில் முன்னதாக உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி மற்றும் டிவிஷன் அமர்வு வழங்கிய உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், நடிகர் கவுண்டமணிக்கு எதிராக கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்’’ எனக்கூறி விசாரணையை முடித்து வைத்தனர்.

The post நடிகர் கவுண்டமணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: நிலத்தை ஒப்படைக்கவும் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Countamani ,Nalini Bhai ,Kodambakkam Arkhad Road ,Chennai ,Sri Abrami Foundation ,
× RELATED தபால் ஓட்டு கேட்டு 78 வயது மூதாட்டி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு