×

மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி செல்ல விடாமல் எங்களை தடுத்துவிட்டனர்

விருத்தாசலம், மே 15: மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட அங்கு மனுதாக்கல் செய்ய முடியாதபடி தடுத்து விட்டதாக விருத்தாசலத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ஆரூரான் சர்க்கரை ஆலையில் 2016-17ல் கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு என்சிஎல்டி 57 ரூபாய் 36 பைசா தர சொல்லி இருந்தார்கள். இப்போது 100 ரூபாயாக தருகிறார்கள்.

இதனால் 7200 விவசாயிகள் பயனடைவார்கள். மோடி போட்டியிடுகின்ற வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக நாங்கள் 111 பேர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கடந்த 10ம்தேதி புறப்பட்டு சென்றோம். நாங்கள் சென்ற ரயில் பெட்டி பழுதடைந்து விட்டது எனக் கூறி அங்கிருந்து எங்களை இறக்கி விட்டு விட்டனர். வாரணாசி செல்ல விடாமல் எங்களை தடுத்து விட்டனர். இதனால் வருகிற 20ம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை நீட்டித்து தர வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

உத்தரவு வந்ததும் நாங்களும் வாரணாசி சென்று வேட்பு மனு தாக்கல் செய்வோம். விவசாயிகள் பெயரில் லட்சக்கணக்கில் வங்கிகளின் கடன் பெற்ற சர்க்கரை ஆலை முதலாளிகள் மீது வழக்கு போட்டுள்ளோம்.அவர்கள் விவசாயிகளை மட்டும் ஏமாற்றவில்லை. உரம் கொடுத்தவர்கள், வாகனங்கள் கொடுத்தவர்கள் என பலரை ஏமாற்றி உள்ளனர். விவசாயிகள் யாரும் வங்கிக்கு செல்லவில்லை. ஸ்டாம் ஒட்டவில்லை, கையெழுத்து இடவில்லை. ஆனால் அவர்கள் பெயரில் கடன் மட்டும் சுமார் 78 கோடி ரூபாய் சர்க்கரை ஆலை முதலாளிகள் வாங்கியுள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும், என்றார்.

The post மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி செல்ல விடாமல் எங்களை தடுத்துவிட்டனர் appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Modi ,Vriddhachalam ,Vriddhachalam Farmers Union ,President ,Ayyakannu ,Vrudhachalam, Cuddalore district ,Dinakaran ,
× RELATED மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்