×

தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்

* பாலியல் தொழிலுக்காக விஐபிக்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்
* பல பெண்களுடன் ஒன்றாக புகைப்படம், வீடியோ எடுத்ததும் விசாரணையில் அம்பலம்

சென்னை: தனது வீட்டிற்கு வந்து தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையின் பிரபலமான அம்மன் கோயில் ஒன்றின் பூசாரி மீது பெண் தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதன்படி நடந்த விசாரணையில், கோயில் குருக்கள் பல பெண்களுடன் ஒன்றாக இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராணி (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: கோவையைச் சேர்ந்தவர் ராணி. சிறு வயதில் பெற்றோர் இறந்ததால் உறவினர்கள் கட்டுப்பாட்டில் ராணி வளர்ந்து வந்தார். இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பை முடித்தார். சினிமா நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசை கொண்ட அவர், கடந்த 2021ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். பிறகு சாலிகிராமம் காந்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை தேடினார். பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது. பிறகு சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்தார். ஆன்மிகம் நாட்டம் கொண்ட ராணி, பாரிமுனையில் உள்ள அந்த பிரபலமான கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஒரு நாள் கோயிலுக்கு சென்ற போது, வரிசையில் நின்ற ராணியை, குருக்கள் ஒருவர் அழைத்து என்ன வேலை செய்கிறீர்கள். உங்களைப் பார்த்தது போல் இருக்கிறதே என்று கூறியுள்ளார். அதற்கு ராணி நான் டிவியில் பணியாற்றி வருகிறேன். இதனால் என்னை டிவியில் பார்த்து இருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு குருக்கள் ராணியை கோயில் கருவறைக்கு அழைத்துச் சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்துள்ளார். அப்போது ராணியிடம் குருக்கள் தனது பெயர் கார்த்திக் முனுசாமி என்று அறிமுகம் செய்து கொண்டு, ராணியிடம் போன் நம்பரை வாங்கிக் கொண்டார்.

பிறகு ராணியின் வாட்ஸ்அப்புக்கு கார்த்திக் முனுசாமி அவ்வப்போது சொற்பொழிவு மற்றும் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுப்பி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால் ராணி எப்போது கோயிலுக்கு வந்தாலும், கருவறைக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தந்துள்ளார். அடிக்கடி இருவரும் போனில் பேசியும் வந்துள்ளனர். அந்த வகையில் ஒருநாள் மாலை அந்தக் கோயிலுக்கு சென்ற போது, ராணியை கோயில் குருக்களான கார்த்திக் முனுசாமி, உங்கள் வீட்டின் வழியாகத்தான் செல்கிறேன், உங்களை வீட்டில் விட்டுவிட்டு செல்கிறேன் என்று தனது பென்ஸ் காரில் ராணியை அழைத்து சென்றார்.

சொகுசு காரில் ராணி தனது வீட்டிற்கு வந்து இறங்கியதும், குருக்கள் கார்த்திக் முனுசாமி, `இவ்வளவு தூரம் வந்து இருக்கேன் வீட்டிற்குள் அழைக்க கூடாதா’ என்று ராணியிடம் கேட்டுள்ளார். இதற்கு ராணியும், வாங்க என்று கார்த்திக் முனுசாமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அப்போது குருக்கள் கார்த்திக் முனுசாமி ‘அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் என்று ராணியிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். சாமி தீர்த்தம் தானே என்று ராணியும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் ராணிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

பிறகு வீட்டின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று ராணியின் முன் அனுமதி இல்லாமல் அவரின் உடைகளை களைந்து உல்லாசமாக இருந்துவிட்டு கார்த்திக் முனுசாமி சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து ராணி கண் விழித்துப் பார்த்தபோது, படுக்கை அறையில் நிர்வாணமான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குருக்கள் கார்த்திக் முனுசாமிக்கு போன் செய்து கேட்டுள்ளார். பிறகு கார்த்திக் முனுசாமி, ராணி வீட்டிற்கு வந்து அவரது காலில் விழுந்து ‘உன் அழகில் மயங்கி நான் இதுபோன்று தவறு செய்துவிட்டேன்’ என்னை மன்னித்துவிடு, என்று கூறி அழுதுள்ளார்.

பிறகு கார்த்திக் முனுசாமி `தனது மனைவியுடன் எனக்கு தாம்பத்திய உறவு இல்லை’ என்றும், `உனது ஜாதகமும், எனது ஜாதகமும் ஒன்று சேர்ந்தால் பலன் கூடும்’ என்றும், `இருவரும் திருமணம் செய்து நன்றாக இருக்கலாம்’ என்றும் கார்த்திக் முனுசாமி ஆசை வார்த்தை கூறியுள்ளார். ராணிக்கு பெற்றோர் இல்லாததால், வாழ்க்கையை தொலைத்த அவருக்கு வேறு வழியின்றி கார்த்திக் முனுசாமியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, ராணியின் வீட்டிற்கு குருக்கள் கார்த்திக் முனுசாமி அடிக்கடி வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் ராணி கர்ப்பமானார்.

பிறகு குருக்கள் கார்த்திக் முனுசாமி, காளிகாம்பாள் கோயிலில் தாலி என்று கூறி ராணியை வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ராணி கர்ப்பமாக இருந்ததால், அது ஜாதகப்படி சரியில்லை என்று கூறி கடந்த 25.2.2023 அன்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்துள்ளார். பின்னர் குருக்கள், தனது விஐபி நண்பர் என்ற புதிதாக ஒருவரை ராணி வீட்டிற்கு காரில் அழைத்து வந்தார். அப்போது திடீரென ஒரு அவசர வேலை இருக்கு நான் சென்று வருகிறேன். அதுவரை எனது விஐபி நண்பருடன் பேசி கொண்டு இரு என கூறி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சிறிது நேரத்தில் அந்த நபர், ராணியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, கணவரான கார்த்திக் முனுசாமிக்கு போன் சென்று நடந்த சம்பவத்தை கூறினார். உடனே வீட்டிற்கு வந்து ராணியிடம் இது வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று குருக்கள் சமாதானம் செய்து வைத்தார். அதன் பிறகு ராணியிடம் குருக்கள் சரியாக பேசாமலும், எனது நண்பருடன் நீ இணக்கமாக சென்று இருந்தால், எனக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் தெரியுமா எனக் கூறி திட்டியும் அடித்தும் வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராணி, கணவரான குருக்களின் செல்போனை எடுத்துப் பார்த்த போது, அதில் ராணியை போல் பல பெண்களுடன் குருக்கள் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, ராணியின் புகைப்படத்தை பலருக்கு அனுப்பி இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.

இதுகுறித்து கார்த்திக் முனுசாமியிடம் கேட்டதற்கு ராணியை கடுமையாக தாக்கிவிட்டு செல்போனை உடைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு கார்த்திக் முனுசாமி, ராணியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பாரிமுனையில் உள்ள அந்த பிரபலமான கோயிலில் உள்ள மற்றொரு குருக்களான காளிதாஸ் என்பவரிடம் கூறி ராணி அழுதுள்ளார். அதற்கு அவர், கார்த்திக் முனுசாமி எனது அண்ணன் மகன்தான். அவன் இப்படித்தான் செய்வான், உனக்கு வேண்டும் என்றால் அவனுடன் நீ ஒன்றாக இருந்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேள், வாங்கித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராணியிடம், கார்த்திக் முனுசாமியுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் சுவேதா என்பவர் வந்து, ‘நீ அழகாய் தான் இருக்கிறாய்…என்னுடன் வா உனக்கு சம்பாதிக்க வழி செய்கிறேன். சென்னையில் இது ஒன்றும் புதிது அல்ல’ என்று கூறி பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்துள்ளார். பிறகு வேறு வழியின்றி கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியாவிடம், ராணி நேரில் சென்று நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். உடனே பிரியா `எனது கணவர் குறித்து போலீசில் சொல்லக் கூடாது’ எனக் கூறி சத்யராஜ் மற்றும் பகத்வச்சலம் ஆகியோர் மூலம் மிரட்டியுள்ளார்.

அதன் பிறகு உயிருக்கு பயந்த ராணி, தனக்கு நடந்த சம்பவத்தை உரிய ஆதாரங்களுடன் இணை கமிஷனரிடம் நேரில் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணி அளித்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோயில் குருக்கள் கார்த்திக் முனுசாமி, புகார் அளித்த ராணியை போன்று பல பெண்களுடன் ஒன்றாக இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து மிரட்டியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குருக்கள் கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தங்கையிடம் பாலியல் சீண்டலில்...