×

டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கும், திஹார் சிறைக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர், போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும், சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையிலான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருந்தன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், அந்த மிரட்டல்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்தது, டெல்லி திஹார் சிறைக்கு தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மிரட்டல் குறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், சிறைக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை செய்ததில் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டெடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

The post டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கும், திஹார் சிறைக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Jail ,Tihar Jail ,
× RELATED டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு