×

கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்; விவசாயிகள் கடும் அச்சம்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே கூக்கல்தெரை பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டதால் பொதுமக்கள் மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் கடும் அச்சம் அடைந்தனர். கோத்தகிரி அருகே கூக்கல் தொரை பகுதியை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் அதிகப்படியாக மலைக்காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் பகல், இரவு மற்றும் அதிகாலையில் 4 மணிக்கு கேரட், பீன்ஸ் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், அவரை போன்ற மலைக்காய்கறிகள் அறுவடை செய்யவும், நீர் பாய்ச்சவும் பணிக்கு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மசினகுடி, சீகூர் வனச்சரகத்தில் இருந்து சமீப காலமாக காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது.

மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, தேயிலை தோட்டம், மலைக்காய்கறிகள் விவசாயம் அதிகம் பயிரிடப்பட்டுள்ள கூக்கல்தொரை பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வனத்துறையினர் 24 மணி நேரமும் வாகன ரோந்து‍, வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்; விவசாயிகள் கடும் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kookaltherai ,Gookkal Torai ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை