×

சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னணி பாடகர் வேல்முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் காரில் வந்தார்.

போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார். இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் காரை ஓட்டி வந்த வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவி மேலாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்,’போக்குவரத்து தடைசெய்யப்பட்ட பகுதியில் பின்னணி பாடகர் வேல்முருகன் குடிபோதையில் காரை ஓட்டிவந்து தகராறு செய்து என்னை தாக்கினார்’ என புகார் அளித்தார். போலீசார், பாடகர் வேல்முருகனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகனை ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

The post சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது appeared first on Dinakaran.

Tags : Velmurugan ,metro train ,Chennai ,Virugambakkam ,Metro Rail ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...